Published : 24 Oct 2020 05:35 PM
Last Updated : 24 Oct 2020 05:35 PM

வளிமண்டலச் சுழற்சி; அடுத்த 3 தினங்களுக்கு டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு புதுவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரம் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு (அக்டோபர் 26,27,28) தென் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

திருத்தணி (திருவள்ளூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 5 செ.மீ., பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 4 செ.மீ., அரக்கோணம் (ராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாலங்காடு (திருவள்ளூர்), ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ.

திருப்பத்தூர் P.T.O (திருப்பத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் ) தலா 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x