Published : 24 Oct 2020 11:33 AM
Last Updated : 24 Oct 2020 11:33 AM
பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.50 கோடி முறைகேடு செய்ததாக அருப்புக் கோட்டையைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளம்பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை(53). எம்.காம்., பி.எட். படித்தவர். கணவரை இழந்தவர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிச்சையை அணுகிய வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி லட்சுமி பிரியா(32), தான் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாகவும் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.2,000 தருவதாகவும், 100 நாட்களுக்குப் பின் ரூ.5 லட்சத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய பிச்சை, தனது குழந்தைகளின் படிப்பு செலவுக்காக கூலி வேலை செய்து சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை லட்சுமிபிரியாவிடம் வழங்கினார்.
அதன்பின் 5 மாதங்களில் மொத்தம் ரூ.1.10 லட்சத்தை மட்டுமே பிச்சையிடம் லட்சுமிபிரியா கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் பிச்சை புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிச்சை கூறுகையில், என்னைப் போன்று, இப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்து இதேபோல் பணம் பெற்று ரூ.50 கோடி வரை லட்சுமிபிரியா மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT