Published : 24 Oct 2020 11:12 AM
Last Updated : 24 Oct 2020 11:12 AM
ஆம்பூர் அருகே குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அமைச்சர் கே.சி.வீரமணியின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாங்கிஷாப் மற்றும் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக பேரணாம் பட்டு பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்காக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வந்தார். அப்போது, அமைச்சர் காரை கண்டதும், பொது மக்கள் காலிக் குடங்களுடன் சென்று அமைச்சர் கே.சி.வீரமணி காரை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து, காரில் இருந்து கீழே இறங்கிய அமைச்சர் வீரமணி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அவர்கள் கூறும்போது, "தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், பாங்கிஷாப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 5 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. தெரு மின்விளக்கு எரிவதில்லை, கால் வாய் தூர்வாரி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடம், "எந்த பிரச்சினைக்கும் போராட்டம் தீர்வாகாது. காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தால் போக்குவரத்து பாதிக்கப்படும். உங்களுக்கான குறைகளை ஆராய்ந்து உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி அவர்களை சமாதானம் செய்தார். பின்னர், அரசு அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் பாங்கிஷாப் மற்றும் காந்தி நகர் பகுதிக்கு உடனடியாக லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரவும் உத்தரவிட்டார்.
இதனையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT