Last Updated : 23 Oct, 2020 08:37 PM

 

Published : 23 Oct 2020 08:37 PM
Last Updated : 23 Oct 2020 08:37 PM

கடத்தப்பட்ட பெண்ணை மீட்கக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை உட்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு தர வலியுறுத்தி தந்தை உட்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்தோர் தடுத்து நிறுத்தினர்.

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் கீர்த்திகா (22). இவர் பிஇ முடித்துள்ளார். இவருக்கு அக்.26-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் அக்.21-ம் தேதி இரவு கீர்த்திகா, தாயார் கலைச்செல்வி, சகோதரர் அஜய் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த 6 பேர் வீடு புகுந்து கலைச்செல்வி, அஜயை அரிவாளால் தாக்கிவிட்டு கிருத்திகாவை கடத்திச் சென்றனர். காயமடைந்த கலைச்செல்வி, அஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸார் தினேஷ்குமார், வெங்கடேசன், சிவகுமார், சுனில்குமார், ராஜாமணி, செந்தில்பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இதுவரை கடத்தப்பட்ட பெண்ணை மீட்காத நிலையில், அவரை மீட்கக் கோரியும் கடத்தலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அந்த பெண்ணின் தந்தை லெட்சுமணன், சகோதரி சினேகா, தாய்மாமன் இளையராஜா ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, மாவட்ட எஸ்பி ரோகித்நாதனிடம் அழைத்துச் சென்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x