Published : 23 Oct 2020 06:49 AM
Last Updated : 23 Oct 2020 06:49 AM

காருக்கு மாத தவணை கட்ட திருட்டில் ஈடுபட்டவர் கைது: 65 பவுன், 3 கிலோ வெள்ளி பறிமுதல்

காருக்கு மாத தவணை கட்ட சுமார் 4 வருடங்களாக திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து, அவரிடம் இருந்து 65 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். அண்மையில் இவரது வீட்டில் 7 பவுன், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடுபோயின. இதுகுறித்து விசாரித்து வந்த குன்றத்தூர் போலீஸார், இப்பகுதிகளில் நடந்த அனைத்து திருட்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால், அந்தப் பகுதியில் இருந்த 150-க்கும்மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர், பம்மல்-கவுல்பஜாரைச் சேர்ந்த பாலாஜி(25)என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்ததில் கார் ஓட்டுநரான பாலாஜி, தனது காருக்கு மாதத் தவணையை முறையாக செலுத்த முடியாததால், பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டம்விட்டு இரவில்சென்று திருடுவதை வழக்கமாக்கிக் கொண்டது தெரிய வந்தது.

மேலும், இதுபோன்ற திருட்டில் 4 வருடங்களாக அவர்ஈடுப்பட்டு வருவதும், திருடியபொருட்களை விற்று கார் தவணையை கட்டியது போக தற்போது இன்னொரு புதிய காரும், மனைவிக்கு நகைகளும் வாங்கியுள்ளதையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து பாலாஜியிடம் இருந்து 65 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x