Published : 23 Oct 2020 06:23 AM
Last Updated : 23 Oct 2020 06:23 AM

கரோனா தடுப்பு பணியில் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினியை பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிறுவனம்

கரோனா தடுப்புப் பணியில் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினி பயன்படுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா கால ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இக்காலத்தில் தொற்றைத் தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் கிருமிநாசினிகள் கொண்டு உரிய இடைவெளியில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இடிஏ நுட்பம்

தூய்மைப்படுத்தும்போது இந்தியாவிலேயே முதல் முயற்சியாக வேதியியல் ஊறுவிளைவிக்காத நீர் வடிவிலான கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறது. இடிஏ நுட்பம் மூலம் வெளிப்படும் பிராணவாயு கலந்த நுண்ணிய நிறமற்ற திரவ வடிவிலான கிருமிநாசினிகள், வேதியியல் தன்மையை முற்றிலும்தவிர்க்கின்றன. இந்த கிருமிநாசினியை பயன்படுத்தும்போது கைகளில் மட்டுமல்ல சுற்றுப் புறப்பகுதிகளிலும் காற்றின் மூலம் கிருமிகள் மற்றும் வேதி பரவலைத் தடுக்கிறது.

இதுவரை அதிநவீன மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், முதல் முறையாக, சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு ஏற்ப செறிவூட்டப்பட்டு, பயணிகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தி வருகிறது.

சாதாரணமான சுத்திகரிக்கப்பட்ட நீர் கலவையைக் கொண்டு பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பம் வழக்கமான குளோரின் பயன்பாடுகளை விட 51 சதவீதம் கூடுதல் சக்தி வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x