Published : 22 Oct 2020 06:04 PM
Last Updated : 22 Oct 2020 06:04 PM

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழகப் பகுதிகளில் நிலவுவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வானமாதேவி (கடலூர்) 7செ.மீ., சூலகிரி (கிருஷ்ணகிரி ) 6 செ.மீ., ஓசூர் (கிருஷ்ணகிரி), கடலூர், மரக்காணம் (விழுப்புரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 5 செ.மீ., போளூர் (திருவண்ணாமலை), செய்யூர் (செங்கல்பட்டு), SRC குடிதாங்கி (கடலூர்) தலா 4 செ.மீ., கிருஷ்ணகிரி, தண்டரம்பேட்டை (திருவண்ணாமலை), பண்ருட்டி (கடலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), அரூர் (தருமபுரி), தருமபுரி P.T.O, செங்கம் (திருவண்ணாமலை) தலா 3 செ.மீ., திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), ஏற்காடு (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), திருப்பத்தூர், விழுப்புரம், பெலந்துரை (கடலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக இன்று வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதி மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 23 ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x