Published : 22 Oct 2020 05:34 PM
Last Updated : 22 Oct 2020 05:34 PM

பண்டிகைக் கால அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை

பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், தடையில்லாமல் கிடைப்பதற்கும், ரேஷன் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நடமாடும் கடைகள் மூலம் இந்தப் பொருட்களை விற்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“பண்டிகைக் காலம் நெருங்கி வரும் பல காரணங்களால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் காய்கறி விலைகளும் உயர்ந்திருக்கின்றன. கரோனா தொற்றின் காரணமாக பொருளாதாரமும், தனி மனிதர்களின் வருமானமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மிகப்பெரும் சுமையாக ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும். எனவே, உரிய முன்னெச்சரிக்கையுடன் வெங்காயம் உட்பட காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

அறிவிப்புகளாலும், ஆணைகளாலும் மட்டும் விலைவாசியைக் குறைத்துவிட முடியாது. மாறாக, கேரள மாநிலத்தில் பண்டிகைக் காலங்களில் மாவேலி ஸ்டோர் என்னும் கடைகளின் மூலம் அரசே குறைந்த லாபத்தில் கடைகளை நடத்தி மக்களைத் துயரச் சுமையிலிருந்து பாதுகாத்து வருவது போல தமிழக அரசும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், தடையில்லாமல் கிடைப்பதற்கும், ரேஷன் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நடமாடும் கடைகள் மூலம் இந்தப் பொருட்களை விற்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x