Published : 22 Oct 2020 03:36 PM
Last Updated : 22 Oct 2020 03:36 PM

கரோனா நோய்த்தொற்று சூழ்நிலையிலும் ரூ.40,718 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழகம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கரோனா நோய்த்தொற்று சூழ்நிலையிலும், 40,718 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, அதன்மூலம் 74,212 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்மூலம் 2020 ஆம் ஆண்டில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது என முதல்வர் பழனிசாமி பேசினார்.

புதுக்கோட்டையில் இன்று அவர் பேசியதாவது:

''புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ITC Limited நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை தொடங்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் விரும்பும் மாநிலமாகவும், தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாகவும் நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. வெற்றிகரமான இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாகவும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகவும் தமிழக அரசு அந்நிய முதலீடுகளை கணிசமான அளவில் ஈர்த்திருக்கிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கரோனா நோய்த்தொற்று சூழ்நிலையிலும், 40,718 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, அதன்மூலம் 74,212 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்மூலம் 2020 ஆம் ஆண்டில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015ன் போது, ITC Limited நிறுவனம் விராலிமலையில், உணவுப்பொருட்கள் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 1,077 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கையெழுத்திட்டது.

அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக, இதுவரையில் சுமார் 820 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 2,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

மேலும், ITC Limited நிறுவனம், 351 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், மறு பொட்டலமிடுதல் மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளுக்காக தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை இன்று தொடங்கி உள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்தப் பகுதியில் முதலீடு செய்துள்ள ITC Limited நிறுவனத்தின் இத்திட்டத்தினைத் தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில் திட்டங்களை செம்மையாக உலகத்தரத்தில் செயல்படுத்தி வருகின்ற ITC நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் பல்வேறு சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் ITC நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். ITC நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் மேலும் அதிக முதலீடுகளை செய்திட முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ITC நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தினைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x