Published : 22 Oct 2020 12:30 PM
Last Updated : 22 Oct 2020 12:30 PM

தமிழகத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிய திமுக ஆட்சி மீண்டும் மலரும்: ஸ்டாலின் பேச்சு 

சென்னை

தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கியது திமுக ஆட்சியில். தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்படுவதற்கான ‘திமுக அரசு’ அமைவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ‘தனியார் மெமோரியல் டிரஸ்ட்’ சார்பில் நடைபெற்ற இலவச வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியைக் காணொலி வாயிலாகத் தலைமையேற்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:

“இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்றுவிட்டார்கள். ஏற்கெனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் காலத்தின் தேவையாக இருக்கின்றன. இந்த முகாமுக்கு வருகை தந்துள்ள, பங்கேற்றுள்ள 50 நிறுவனங்களுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், இன்றைய தினம், வேலை இருக்கிறது, வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று சொல்வதே அரிய வார்த்தையாக ஆகிவிட்ட காலம்.

அனைவரும் படிக்க வேண்டும்; அனைவரும் வேலைக்குப் போக வேண்டும்; கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி தமிழகத்தில் தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சிதான் திமுக. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை - என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக மறைந்த திமுக தலைவர் வைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது காமராசர் என்றால், ஏராளமான கல்லூரிகள் திறந்து வைத்தவர் தலைவர் கருணாநிதிதான்.

ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998இல் உருவாக்கினார்.

முதல்வர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம்தான் உருவாக்கியது.

அரசுத்துறையை கணினி மயமாக்க முனைந்தார்.

பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார்.

தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.

ரூ.340 கோடியில் டைடல் பார்க்கை 2000 ஆம் ஆண்டில் கட்டினார்.

கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார்.

சிறுசேரியில் வன்பொருள் - மென்பொருள் பூங்கா அமைத்தார்.

தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி. ஹைவே ஆக்கினார்.

தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.

யுனிகோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.

உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.

அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையங்களை உருவாக்கினார்.

கல்லூரிகளிலும் கணினிப் பயிற்சி தொடங்கினார்.

தமிழ் இணைய ஆய்வு மையம் அமைத்தார்.

டானிடெக் அமைத்தார்.

1996-க்கு முன்னால் 34 ஐ.டி. நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் இருந்தன. 1996 - 2000 காலகட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தன.

1994 ஆம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000 ஆம் ஆண்டில் 1900 கோடி ஆனது.

ஒரே இடத்தில் அனைத்துத் தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் தலைவர் கருணாநிதி.

ராணிப்பேட்டை, ஓசூர், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகங்கள் அமைத்தார்.

ஹூண்டாய் வந்தது. மிட்சுபிசி வந்தது. ஃபோர்டு வந்தது.

"சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்" என்று தனியார் ஆங்கில ஏடு எழுதியது.

இவ்வளவையும் செய்தவர் முதல்வர் கருணாநிதி.

இத்தகைய திமுக அரசு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

இத்தகைய சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக ஏராளமான இளைஞர்களின் கனவு நிறைவேறட்டும் என்று வாழ்த்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x