Published : 22 Oct 2020 12:01 PM
Last Updated : 22 Oct 2020 12:01 PM

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்; குண்டர் சட்டம் பாயும்: முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரியில் மீண்டும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒன்றரை மாதங்களில் 8 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

காலாப்பட்டு சிறையிலிருந்து செல்போனில் வெளியே உள்ள ரவுடிகளிடம் பேசி மாமூல் வசூலிப்பது மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாமூல் தராதோரும், முன்விரோதத்தாலும் கொலைகள் நடந்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு காலாப்பட்டு சிறையில் திடீர் சோதனை நடத்திய போது 12 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, " இதில் கைதிகளுக்கும் வார்டன்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதுதெரிய வந்துள்ளது. செல்போன்களை அவர்கள் வாங்கி தந்துள்ளனர். இணைய செயலியில் (கூகுள் பே) பணம் பெற்று செல்போனை சிறைக்குள் ரவுடி கைதியொருவர் விற்றுள்ளார். சாதா செல்போன் ரூ. 12 ஆயிரத்துக்கும், ஆன்ட்ராய்டு போன் ரூ. 25 ஆயிரத்துக்கும் விற்றுள்ளனர். இனி நடவடிக்கை கடுமையாக இருக்கும்"என்றனர்.

முதல்வர் பதில்

இதுபற்றி முதல்வர் நாராயண சாமியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

கடந்த ஆட்சிக்காலத்தில் முதல்வராக ரங்கசாமி இருந்த போதுரவுடிகளை கட்டுப்படுத்தவில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்திலேயே ரவுடிகள் இருந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 29 பேரை சிறையில் அடைத்தோம்.

வெளியில் இருக்கும் தங்கள் கூட்டாளிகள் மூலம் சிறையில் இருந்து ரவுடிகள் மாமூல் வசூலிப்பது இன்னும் நடக்கிறது. பல முறை சிறையில் சென்று செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் செல்போனில் மிரட்டுவது தொடர்கிறது. சிறையில் பணிபுரியும் சில வார்டன்கள் உதவியுடன் செல்போன் கொண்டு செல்வதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. தற்போது 12 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம். சிறையிலிருந்து வந்த உத்தரவுகளே அண்மையில் மேட்டுபாளையம் பகுதிகளில் நடந்த கொலைகளுக்கு காரணம்.

செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க செல் ஜாமரின் சக்தியை அதிகரிக்க உள்ளோம். வார்டன்களை மாற்ற உள்ளோம். தவறு செய்த வார்டன்கள் தண்டிக்கப்படுவார்கள்.

சிறையில் இருப்போர் வெளியில் இருப்போர் மூலம் மிரட்டி மாமூல் கேட்டு தராதது கொலைகளுக்கு முக்கிய காரணமாக தெரிய வந்துள்ளது. மாமூல் கேட்போரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். உளவுத்துறையும் இவ்விஷயத்தை கண்காணிக்க உள்ளது. காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்க வில்லை. காவல் துறையிலும் சில புல்லுருவிகள் உள்ளனர். அதை களைவோம். என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x