Published : 22 Oct 2020 06:46 AM
Last Updated : 22 Oct 2020 06:46 AM

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு சிங்கப்பூரின் முதலீடு, பங்களிப்பு அவசியம்: தூதரக அதிகாரிகளிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கு சிங்கப்பூரின் முதலீடு, பங்களிப்பு அவசியம் என்று சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரக உயர்ஆணையர் சைமன் வோங், தூதரகதலைவர் பாங் கோக் தியான், செயலாளர்கள் ஓங் சோங் ஹூய், அமண்டா க்வேக், தூதர் இவான் டான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, சிங்கப்பூர் நாட்டின் கேப்பிடாலேண்ட் நிறுவன வளாகத்தில் நடுவதற்கான மரக்கன்றை, அந்த நிறுவனத்தின் அதிகாரி சி.வேலனிடம் முதல்வர் வழங்கினார்.

பின்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சிங்கப்பூர் தூதரக குழுவினர் சந்தித்தனர். அப்போது நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது துணை முதல்வர் பேசியதாவது:

தமிழகம் - சிங்கப்பூர் இடையேவரலாற்று சிறப்புமிக்க, ஆழமானதொடர்புகள் உள்ளன. இருந்தபோதிலும், நம்மிடையே பொருளாதார உறவுநிலை இன்னும் அதன் முழு அளவை அடையவில்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான இடமாக தமிழகம் திகழ்கிறது. கொரியா, ஜப்பான்உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தை விரும்பத்தக்க முதலீட்டுக்கு ஏற்ற பகுதியாக தேர்வு செய்துள்ளன. இனிவரும் ஆண்டுகளில் சிங்கப்பூரில் இருந்து பெரும் அளவில் முதலீட்டை பெற விரும்புகிறோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்கு திட்ட ஆவணத்தின் பல்வேறு திட்டப் பணிகள், பொது - தனியார் பங்கேற்பு முறையிலும், சில திட்டப் பணிகள் அரசின் உதவியுடன் முற்றிலும் தனியார் துறையாலும் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகம் போன்ற மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிங்கப்பூரின் அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம்.

குறிப்பாக, சென்னையில் ‘ஃபின் டெக்’ மாநகரத்தை உருவாக்குதல், மதுரை - தூத்துக்குடி தொழிலக பெருவழிச் சாலை திட்டப் பணியின் ஒரு பகுதியாக தொழிற்பூங்கா, முனையங்கள், தொகுப்புகளை உருவாக்குதல், துறைமுகங்கள் ஏற்படுத்துதல், நுண்ணறிவு சார்ந்தபோக்குவரத்து தீர்வுகள், கழிவுநீர்மேலாண்மை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் சேவை பணிகள், வாடகை வீடுகள் உட்பட குறைந்த விலையில் வீடுகள், புராதனம் மற்றும் ஓய்வு விடுதிகளின் மேம்பாட்டுடன் இணைந்த சுற்றுலாதொடர்பான திட்டப் பணிகள், இளைஞர்களுக்கு அதிக ஊதியத்துடன் பணி கிடைப்பது மற்றும் தொழிற்சாலைகளுக்கு திறன்மிகு மனிதவளம் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான திறன் மேம்பாட்டு முயற்சிகள், தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான முயற்சிகள் ஆகிய துறைகளில் பங்களிப்பு தேவைப்படுகிறது.

இத்துறைகளில் முயற்சிகள், முதலீடுகள் தொடர்பாக சிலவற்றுக்கு சிங்கப்பூரும், தமிழகமும் ஒன்றுக்கொன்று பங்களிக்க இயலும் என்று நம்புகிறேன். இது சிங்கப்பூர் - தமிழகம் இடையே ஆழமானபாரம்பரிய பிணைப்பை ஏற்படுத்தும். தமிழக வளர்ச்சி, செழிப்புக்கு சிங்கப்பூரின் பங்களிப்பு மதிப்பு மிக்கதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x