Published : 21 Oct 2020 07:59 PM
Last Updated : 21 Oct 2020 07:59 PM

4 கூடுதல் டிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வு: சட்டம் - ஒழுங்குக்கென சிறப்பு டிஜிபி பதவி உருவானது

பி.கே.ரவி, ராஜேஷ் தாஸ், ஷகில் அக்தர்.

சென்னை

தமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபியாகப் பதவி உயர்வு அளிக்கப்படுள்ளது. சட்டம்- ஒழுங்குக்கென சிறப்பு டிஜிபி பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிஜிபிக்கள் கோட்டா 6. ஆனால், கூடுதலாகப் பதவி நீட்டிப்பு, ஆலோசகர் என அறிவிக்கப்பட்டதால் ஏடிஜிபிக்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு கூடுதலாக 5 டிஜிபிக்கள் வரை பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பின்னர் மேலும் இருவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதனால் தமிழக டிஜிபிக்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் 13 வரை இருந்தது. இதில் இருவர் ஓய்வுபெற்ற நிலையில் டிஜிபிக்கள் 11 பேர் இருந்தனர். தற்போது 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் தமிழக டிஜிபிக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

தற்போது அளிக்கப்பட்ட பதவி உயர்வுடன் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி, சிறப்பு டிஜிபி பதவியாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற டிஜிபி பதவிகளும் அதேபோன்று நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் மாறுதல் குறித்த விவரம்:

1. தமிழக தலைமையிட ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் கந்தசாமி டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு தலைமையிடச் சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது நிலை உயர்த்தப்பட்ட பதவி ஆகும்.

2. தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது நிலை உயர்த்தப்பட்ட பதவி ஆகும்.

3. அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு அதே அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது நிலை உயர்த்தப்பட்ட பதவி ஆகும்.

4. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஆலோசகராக டெல்லி அயல் பணியில் இருக்கும் கூடுதல் டிஜிபி ப்ரஜ் கிஷோர் ரவி டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு அதே அயல் பணியில் தொடர்கிறார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பதவி உயர்த்தப்பட்ட 4 டிஜிபிக்களுடன் சேர்த்து தமிழக டிஜிபிக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு 15 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x