Published : 21 Oct 2020 06:22 PM
Last Updated : 21 Oct 2020 06:22 PM

நெல்லை, தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு அனுசரிப்பு

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், தென்காசி மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங், திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் மகேஷ்குமார், சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியில் இருந்தபோது உயிர்துறந்த ஆய்வாளர் சாது சிதம்பரம், சார்பு ஆய்வாளர் முருகன், காவலர்கள் பழனிதாஸ், ராமசாமி ஆகியோரது இல்லங்களுக்கு பாளையங்கோட்டை, தச்சநல்லூர், திருநெல்வேலி டவுன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர்களும், போலீஸாரும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, மரியாதை செலுத்தினர்.

சேரன்மகாதேவியில் பேருந்து நிலையத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஏஎஸ்பி பிரதீப் தலைமையில் காவல்துறையினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் ஏ.டி. ராஜாராம், குமாரி சித்ரா, மேரி ஜெமிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி:

தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் நினைவு ஸ்தூபியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 10 வீரர்கள் உயிரிழந்தனர். இதனை நினைவுகூறும் வகையிலும், ஆண்டு தோறும் பணியின் போது மரணமடையும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.09.2019 முதல் 31.08.2020 வரையிலான ஓராண்டில் நாடு முழுவதும் பணியின் போது காவல் துறையினர் 271 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், தலைமைக் காவலர் சேட்டு, காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்குவர். இவர்களில் காவலர் சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பிரபல ரவுடி துரைமுத்துவை பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டு வீசியதில் அவர் வீரமரணம் அடைந்தார்.

இந்த 271 காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலும் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, செல்வன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், டிஎஸ்பிக்கள் கணேஷ், பொன்னரசு, வெங்கடேசன், காட்வின் ஜெகதீஷ், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், சங்கர், கலைக்கதிரவன், இளங்கோவன், கண்ணபிரான், ஏஎஸ்பி (பயிற்சி) அபிஷேக் குப்தா மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அ.அருள்தாசன், ரெ.ஜாய்சன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x