Published : 21 Oct 2020 06:16 PM
Last Updated : 21 Oct 2020 06:16 PM

தமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி அனுமதி

உயர் மட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி.

சென்னை

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு முதல்வரின் சீரிய தலைமையின் கீழ் முதலீடுகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்வரின் தலைமையில் இதுவரை, 2 உயர்மட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23 ஆயிரம் நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வணிகம் புரிதல் எளிதாக்குதலை மேலும் மேம்படுத்துவதற்காக, பச்சை நிற வகை தொழிற்சாலைகள் நேரடியாக இயக்குவதற்கான இசைவு வழங்குதல் மற்றும் திட்டம் சாராத பகுதிகளில், நிலப் பயன்பாட்டின் வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச் சாளர முறையில் சேர்த்து வணிக எளிதாக்குதல் விதிகளின் கீழ் கருதப்பட்ட ஒப்புதல் அளிக்கும் வகையில் கொள்கைச் சீர்திருத்தம் செய்ய உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தலைமையில் இன்று நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 25 ஆயிரத்து 213 கோடி ரூபாய் அளவுக்கான தொழில் முதலீடுகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து, சுமார் 49 ஆயிரத்து 3 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது.

இன்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமான திட்டங்கள் ஈ.என்.இ.எஸ் டெக்ஸ்டைல் மில் (ராம்ராஜ்) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மோபிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Seoyon E-HWA Automotive India Private Limited நிறுவனத்தின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி திட்டம், Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Ather Energy நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் ஆகியவையாகும்.

இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

மேலும், இந்தக் கூட்டத்தில், ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை இனங்கள், தொழில் தோழன் தகவு மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடர்புடைய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x