Published : 21 Oct 2020 04:48 PM
Last Updated : 21 Oct 2020 04:48 PM

பாலாறு பொருந்தலாறு அணை, சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு

பாலாறு பொருந்தலாறு அணை மற்றும் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (அக். 21) வெளியிட்ட அறிக்கை:

"திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போகப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 25-ம் தேதி முதல் 3.3.2021 முடிய 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மி.க. அடிக்கு மிகாமல் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்தும் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து வரும் 26-ம் தேதி முதல் 15.3.2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x