

நான்கு மாதமாக ஒப்புதல் வழங்காமல் இனியும் சட்ட நிபுணர்கள் ஆலோசனை என காலந்தாழ்த்துவதா, எங்கிருந்தோ அளிக்கப்படும் அழுத்தமும் தான் இந்த தாமதத்திற்கு காரணமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதியை விளைவிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை உறுதிப்படுத்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது. ஜூன் மாதம் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது பின்னர் அது செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவாக இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. மருத்துவ கலந்தாய்வு இதனால் தாமதமாகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தும், கோரிக்கை வைத்தும் வருகின்றன. அமைச்சர்கள் 5 பேர் நேற்று ஆளுநரை சந்தித்து இருக்கும் சிக்கலை தெரிவித்து விரைந்து முடிவெடுக்க கோரிக்கை வைத்துவிட்டு வந்தனர். ஆளுநர் விரைவில் முடிவெடுப்பதாக உறுதி அளித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
இந்நிலையில் ஆளுநர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் தாமதப்படுத்தும் முயற்சி என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:
“மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 3 வாரங்கள் ஆகும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மையென்றால் 3 வார அவகாசம் காலம் தாழ்த்தும் முயற்சியே.
7.5% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து அதிகபட்சமாக ஒரு நாளில் சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுக்க முடியும். ஆனால், முதன்முதலில் இதற்கான பரிந்துரை ஜூன் 15-ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் ஆலோசனை நடத்துவதாக கூறுவதை நம்ப முடியவில்லை.
அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகி விடக் கூடாது என்ற எண்ணமும், எங்கிருந்தோ அளிக்கப்படும் அழுத்தமும் தான் இந்த தாமதத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதியை விளைவிக்கும்.
நவம்பர் இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) உத்தரவிட்டால், மாணவர் சேர்க்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எழும் அல்லது எழுப்ப வைக்கப்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்தப்படுவதைத் தான் அதிகார மையங்கள் விரும்புகின்றனவோ?
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.