Published : 21 Oct 2020 01:01 PM
Last Updated : 21 Oct 2020 01:01 PM

காவலர் வீரவணக்க நாள்: ஸ்டாலின் அஞ்சலி

சென்னை

காவலர் வீரவணக்க நாள் இன்று அனுஷ்டிக்கப்படுவதை ஒட்டி நாடெங்கும் உயிர்நீத்த காவலர்களுக்கு தனது வீர வணக்கத்தைச் செலுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘காவலர் வீரவணக்க நாள்’ (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படும் இந்நாளில் ஆண்டுதோறும் காவலர்கள் பணியின்போது வீரமரணம் அடைபவர்கள் நினைவுகூரப்படுவர். ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டியன் மரணம் கடந்த ஆண்டு நினைவுகூரப்பட்டது.

இந்த ஆண்டும் கொள்ளையனைப் பிடிக்கும் முயற்சியில் குண்டு வெடித்து உயிரிழந்த தூத்துக்குடி காவலர், கரோனா பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த எண்ணற்ற அதிகாரிகள், காவலர்கள் தியாகம் நினைவுகூரப்படும். அகில இந்திய அளவில், மாநில அளவில் காவலர் வீர வணக்க தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

காவலர் வீரவணக்க நாளை ஸ்டாலின் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவு:

“காவல்துறையில் பணியாற்றித் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து - வீர மரணமடைந்த போலீஸாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இன்று (21.10.2020) நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

நாட்டின் மற்றும் மாநிலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பில் - பொது அமைதியை நிலைநாட்டுவதில் உயிர் நீத்த போலீஸாருக்கு - குறிப்பாக, கரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி - உயிர் நீத்த தியாக சீலர்களான போலீஸார் அனைவருக்கும் திமுக சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x