Published : 21 Oct 2020 11:29 AM
Last Updated : 21 Oct 2020 11:29 AM

கரோனா பரவல்; நேரில் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதைத் தவிருங்கள்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

கரோனா பரவல் இருக்கும் நேரத்தில் திரளானவர்கள் தன்னைச் சந்தித்துப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நேற்றைய (அக். 20) நிலவரப்படி, 3,094 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 ஆக உயரந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வருகின்றனர். இந்நிலையில், கரோனா தாக்கத்தைக் கருத்தில் கொண்டு தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 21) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"எனது பிறந்த நாளைக் கொண்டாடுகிற வகையில் நாளை (அக். 22), வியாழக்கிழமை அன்று சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகளைத் தோழர்கள் செய்து வருவதை அறிந்தேன். கரோனா பரவல் இருக்கும் நேரத்தில் திரளானவர்கள் என்னைச் சந்தித்துப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். எனவே, என்னைச் சந்தித்து வாழ்த்துக் கூற யாரும் வரவேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

என் மீது அன்பு கொண்டு நேரில் வாழ்த்துச் சொல்ல விரும்பிய அனைத்து இயக்கத் தோழர்களுக்கும் எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x