Published : 21 Oct 2020 07:45 AM
Last Updated : 21 Oct 2020 07:45 AM

இலங்கைக்கு கடத்த முயற்சி; பாம்பன் கடலில் 500 கிலோ மஞ்சள் பறிமுதல்: நாகையில் பதுக்கப்பட்ட 2,500 கிலோ பிடிபட்டது; 4 பேர் கைது

பாம்பன் கடலில் நாட்டுப் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்.

ராமேசுவரம் / நாகப்பட்டினம்

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ மஞ்சளை பாம்பன் கடலில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோன்று, நாகையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2,500 கிலோ விரலி மஞ்சளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தல் நடைபெற உள்ளதாக சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமேசுவரம் சுங்கத் துறையினர் பாம்பன் குந்துக்கால் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு நடுக்கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் நாட்டுப் படகில் மூட்டைகளைக் கண்ட சுங்கத் துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் 10 சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது அதில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் இருந்தது. இதை இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து படகில் இருந்த வேதாளையைச் சேர்ந்த படகு உரிமையாளர் மலைராஜ், மாரிச்சாமி, ராஜா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நாட்டுப் படகு, 500 கிலோ மஞ்சள் ஆகியவற்றை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நாகையிலும் பறிமுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அலங்காரன்காடு பெரிய குத்தகையைச் சேர்ந்த முனீஸ்வரன்(31) என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் நடத்திய சோதனையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 80 மூட்டை (2 ஆயிரம் கிலோ) விரலி மஞ்சளை கைப்பற்றினர்.

முனீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அதேபகுதியில் நேற்று மேலும் 19 மூட்டை (475 கிலோ) விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

முனீஸ்வரன் உதவியுடன் மஞ்சளை பதுக்கி, இலங்கைக்கு கடத்த முயன்ற யாழ்ப்பாணம் மதக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிரி என்கிற செல்வாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x