Published : 21 Oct 2020 07:21 AM
Last Updated : 21 Oct 2020 07:21 AM

உதவி செய்வது போல நடித்து நூதன முறையில் 15 மூதாட்டிகளிடம் நகை, பணம் திருடிய 7 பெண்கள் கைது

சென்னையில் அடுத்தடுத்து 15 மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை திருடியதாக கைது செய்யப்பட்ட 7 பெண்கள். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்.

சென்னை

மூதாட்டிகளுக்கு உதவுவதுபோல் நடித்து நகை திருட்டில் ஈடுபட்டதாக 7 பெண்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சோழவரத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவர் கடந்த 8-ம் தேதி திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த சில பெண்கள் அப்பகுதியில் திருட்டுகள் அதிகமாக நடைபெறுவதாகவும் நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளும்படியும் கூறியுள்ளனர். பின்னர் சத்யாவுடன் பேருந்தில் பயணம் செய்து, அவர் பையில் வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை திருடிச் சென்றனர்.

முன்னதாக இதேபோல கடந்த 6-ம் தேதி கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த குப்பம்மாள் என்பவரிடம் ஆர்.கே.நகர் பகுதியில் இதேபோல் சில பெண்கள் கவனத்தை திசை திருப்பி 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதேபோல் 15 மூதாட்டிகளிடம் அடுத்தடுத்து நகை, பணம் திருடப்பட்டது.

இதையடுத்து மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டிய பெண்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல் கட்டமாக குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மஞ்சுதோப்பைச் சேர்ந்த ராணி, திலகா, ராஜாமணி, மரியா ஆகிய 4 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 144 கிராம் தங்க நகைகள் மற்றும்ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் கொடுத்த தகவலின்பேரில்அவர்கள் ஊரைச் சேர்ந்த இசக்கியம்மாள், லட்சுமி, உஷா ஆகிய மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 48 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x