Last Updated : 20 Oct, 2020 08:11 PM

 

Published : 20 Oct 2020 08:11 PM
Last Updated : 20 Oct 2020 08:11 PM

சிறுமி பாலியல் வழக்கை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுமி பாலியல் வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், தன் 16 வயது மகளின் வயிற்றில் வளரும் 7 மாத கருவைக் கலைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், மனுதாரரின் மகள் 15 வயதில் கடத்தப்பட்டார். அவரை கண்டுபிடிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரரின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 17 வயதாகும் அவர் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். கருவை கலைக்க சிறுமியும், அவரது தாயாரும் விரும்புகின்றனர். எனவே கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பது தொடர்பாக மருத்துவக்குழு தான் முடிவெடுக்க முடியும். நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. மனுதாரர் மகளின் உடல் நிலையை தஞ்சை ராஜா மிராஸ்தாரர் அரசு மருத்துவமனை மருத்துவக்குழு பரிசோதித்து முடிவெடுக்க வேண்டும்.

மனுதாரர் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அனைத்து மகளிர் போலஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் விரைவில் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் கீழமை நீதிமன்றம் 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x