Published : 20 Oct 2020 03:51 PM
Last Updated : 20 Oct 2020 03:51 PM

‘சிறைக்குள் பிரபல ரவுடிக்கு அதிகாரியால் கொலை மிரட்டல்’: மனைவி தொடர்ந்த வழக்கில் உள்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கொலை வழக்கில் தண்டனை பெற்று புழல் சிறையில் இருக்கும் தனது கணவரான பிரபல ரவுடிக்கு காவல் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி தொடர்ந்த வழக்கில் உள்துறைச் செயலர், சிறைத்துறை ஏடிஜிபி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு சிறையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு முதல் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறுநீரக மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சென்றபோது, நாகேந்திரனின் உடல் எடை கூடியதால், சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும் என எச்சரித்த மருத்துவர்கள், ஏப்ரல் மாதம் சிகிச்சை அளிக்கத் தேதி குறித்துள்ளனர். ஆனால், அவரை ஏப்ரல் 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்க புழல் சிறைக் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.

இதனால் கணவரை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்க அனுமதிக்கக் கோரி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி மே 25, ஜூன் 10-ம் தேதிகளில் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தனது கணவருக்கு சிறைக்குள் மிரட்டல் இருப்பதாகவும், துப்பாக்கி முனையில் அவர் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டி புழல் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு எதிராக செப்டம்பர் 24-ம் தேதி, உள்துறைச் செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோருக்கு விசாலாட்சி புகார் மனு அனுப்பியிருந்தார்.

அந்தப் புகார் மீது உரிய முறையில் விசாரணை நடத்த டிஐஜி அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரியை நியமிக்கக் கோரி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, புழல் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x