Last Updated : 20 Oct, 2020 02:11 PM

 

Published : 20 Oct 2020 02:11 PM
Last Updated : 20 Oct 2020 02:11 PM

தென்காசி மாவட்டம் புளியரை அருகே 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது: வனத்துறையினர் ஆய்வு

தென்காசி

புளியரை அருகே கொட்டகைக்குள் புகுந்த மர்ம விலங்கு 6 ஆடுகளை கடித்துக் கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

தென்காசி மாவட்டம், புளியரை அருகே பகவதிபுரம் கிராமம் உள்ளது. இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோமன் வர்க்கீஸ் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அவர், தனக்குச் சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.

அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இரவு நேரத்தில் இவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலையில் கொட்டகையில் இருந்த 6 ஆடுகள் கழுத்து மற்றும் உடற்பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, செங்கோட்டை வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு வந்தனர். உயிரிழந்த ஆட்டை கால்நடை மருத்துவர் உடற்கூராய்வு செய்தார். ஏதோ மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்தது தெரியவந்தது.

அப்பகுதியில் வன விலங்குகளின் கால்தடம் உள்ளதா என்பதை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், வன விலங்குகளின் கால் தடம் எதுவும் பதிவாகவில்லை.

உடற்கூராய்வுக்கு பின்னரே ஆடுகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என்றும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x