Published : 20 Oct 2020 01:40 PM
Last Updated : 20 Oct 2020 01:40 PM

கொள்முதல் செய்வதில் அலட்சியம்; நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; பேட்டியில் மட்டுமே ஆர்வம் காட்டும் அமைச்சர்: டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை

பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. புதிய கொள்முதல் பருவத்தில் உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் செயல்படாதது, காவிரிப் பாசன மாவட்டங்களில் எட்டப்பட்டுள்ள அதிக விளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு நெல் மூட்டைகள் குவிந்து வருகின்றன.

அதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுவதற்காக காத்துக் கிடக்கின்றன. கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல், மழையில் நனைந்து வீணானதாகத் தகவல் வெளியானது.

கொள்முதல் செய்யப்படும் நெல்லைச் சேமித்து வைக்க போதிய வசதியை தமிழக அரசு இதுவரை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு விவசாயிகளால் வைக்கப்படுகிறது. கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரும் நெல்லை 20 நாட்களுக்கு மேல் சாலை ஓரத்தில் கொட்டிக் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.

தொடர் மழையின் காரணமாக அந்த நெல் ஊறி ஈரப்பதம் அதிகரிப்பதுடன் முளைத்தும் விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலைக்கு இதற்கு அரசின் அலட்சியமே காரணம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவு:

“ பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 20, 2020

கடந்த சில நாட்களாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெல் கொள்முதல் தொடர்பாக விடுத்து வரும் கோரிக்கைகளைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், உண்மை நிலவரத்தை மறைத்துப் பேட்டி கொடுப்பதில் மட்டுமே உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது.

இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilNadu மெத்தனத்தால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x