Published : 20 Oct 2020 12:42 PM
Last Updated : 20 Oct 2020 12:42 PM

முதல்வர் பழனிசாமியுடன் வைகோ சந்திப்பு

சென்னை

முதல்வர் பழனிசாமியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். முதல்வரின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். உடனடியாக சொந்த ஊர் சென்ற முதல்வர் பழனிசாமி தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வரின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசு துணைத் தலைவர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

தாயார் மறைவுக்குப் பின் முதல்வர் பழனிசாமி சென்னை திரும்பவில்லை. அதிமுக ஆண்டு விழாவைக் கூட சேலத்தில் கொண்டாடினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் நேரில் வந்து துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். இதனிடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் இல்லத்துக்கு நேரில் வந்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி வைகோ அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வரிடம் பேசிய வைகோ, அவரது தாயார் மறைவு குறித்து துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x