தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் 2 பேருக்கு 21-ம் தேதி வரை சிபிசிஐடி காவல்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்து வந்தனர்.
தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்து வந்தனர்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேச்சி உட்பட 2 பேரை 21-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி கோவில்பட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன்(35). நிலத்தகராறில் கடந்த செப்.17-ம் தேதி செல்வன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீஸார், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சின்னத்துரை, முத்துராமலிங்கம், சரணடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கடந்த 30-ம் தேதி முதல் அக்.6-ம் தேதி வரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சேர்ந்த பேச்சி(43), தாமரைமொழி சன்னதி தெருவைச் சேர்ந்த கருப்பசாமி(46) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகியோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் கடந்த 16-ம் தேதி கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக நேற்று 3 பேரும் கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேரையும் அக்.21 வரை சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியும், 21-ம் தேதி மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், திருமணவேலை பேரூரணி சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பேச்சி, கருப்பசாமியை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in