Published : 20 Oct 2020 12:15 PM
Last Updated : 20 Oct 2020 12:15 PM

திமுக கூட்டணி குறித்து விமர்சனம்; நகைச்சுவை அரசியல் நடத்துவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 20) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துகளைக் கூறுவதன் மூலம் நகைச்சுவை மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். அதை உறுதி செய்கிற வகையில் திமுக தலைமையிலான கூட்டணி வாகனத் தயாரிப்புத் தொழில் முடங்கியிருப்பதைப் போல செயலற்று இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும், பல கட்சிகள் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர இருப்பதாகவும் அடிப்படையே இல்லாமல் ஆதாரமற்ற அவதூறு கருத்தைக் கூறியிருக்கிறார். இந்தக் கூற்றுக்கு மாறாக இக்கூட்டணி உறுதியாகச் செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்கள் நலன் சார்ந்து நீண்டகாலமாக ஒற்றுமையுடன் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார்.

தமிழக மக்களைப் பாதிக்கிற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசி கருத்துகளைப் பகிர்ந்து, விவாதித்து, தீர்மானமாக வடித்து, கொள்கை திட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது, போராட்டங்கள் நடத்துவது என ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது ஒரு கொள்கைக் கூட்டணி. அதிமுக - பாஜக கூட்டணியைப் போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல.

திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் அடிக்கடி கூடி விவாதித்து முடிவெடுப்பதைப்போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் என்றைக்காவது மக்கள் பிரச்சினைகள் குறித்துக் கூடிப் பேசியிருக்கிறதா? விவாதித்திருக்கிறதா? முடிவெடுத்திருக்கிறதா?

கூட்டணிக் கட்சிகள் என்பது அடிக்கடி கூடிப் பேசவேண்டும். கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, கூட்டணிக் கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட நடைமுறையில் கடுகளவும் கடைப்பிடிக்காத அதிமுக கூட்டணியை என்னவென்று அழைப்பது?

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருக்கிறாரே தவிர, கூட்டணிக் கட்சிகள் என்ற முறையில் என்றைக்காவது கூடி விவாதித்திருக்கிறாரா?

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2021 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக பாஜக தலைமையோடு அதிமுக தலைமை கலந்து பேசியிருக்கிறதா?

அதிமுக கூட்டணியில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் இருப்பதை விட ஒரு அவமானம் பாஜகவுக்கு இருக்க முடியாது. அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்ற பெயரை டி.ஜெயக்குமாரால் வெளியிட முடியுமா?

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது. இந்நிலையில், எஃகு கோட்டை போல உறுதியாகச் செயல்பட்டு வருகிற திமுக தலைமையிலான கூட்டணியைப் பற்றிப் பேச டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அதிமுக கூட்டணிக்கும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே பெற்ற வாக்குகளின் மொத்த வித்தியாசம் 5 லட்சத்திற்கும் குறைவானதுதான். அதாவது 1.1 சதவீதம்தான் வித்தியாசம். அந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கு இரண்டு பேர் அதிமுக கூட்டணியை எதிர்த்து திமுக கூட்டணிக்கு குறைந்தபட்சம் வாக்களித்தாலே எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

அதிமுக கூட்டணியில் பாஜகவைச் சேர்த்தால் கடந்த மக்களவைத் தேர்தலைப் போல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு இருக்கிறது. இந்த அச்சம் அதிமுக தலைமைக்கு மட்டுமல்ல, அந்த கட்சியின் தொண்டர்களிடமும் இருக்கிறது. தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜக இருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள்தான்.

எனவே, அதிமுக கூட்டணியில் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு தமிழக மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கிற கேடயமாகவும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகிற வாளாகவும் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி விளங்குகிறது.

எனவே, எப்போதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x