விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் தர்ணா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சாத்தூர் காமாட்சி தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(37). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் தினக்கூலி அடிப்படையில் கணினி இயக்குபவராகப் பணியாற்றினார். 3 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாததால் பணிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரியும் தினக்கூலி அடிப்படையில் மீண்டும் அலுவலக உதவியாளராகப் பணி வழங்கக் கோரியும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த சரவணன், நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் சூலக்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
