Published : 19 Oct 2020 09:38 PM
Last Updated : 19 Oct 2020 09:38 PM

மா.சுப்பிரமணியம் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியம் மகன் மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்குத் தனது மனைவியுடன் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம் கடந்த செப்.28 ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகனும் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்பழகன் 17-ம் தேதி காலை திடீர் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏற்கெனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்து வந்ததை கரோனா வந்து பறித்துச் சென்றுவிட்டது.

மா.சு. இணையருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு இப்படி ஒரு சோதனையா?” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை தனது மனைவி துர்காவுடன் மா.சுப்பிரமணியனின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவரது மகன் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், மா.சு. தம்பதியிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x