Published : 19 Oct 2020 07:20 PM
Last Updated : 19 Oct 2020 07:20 PM

இலங்கை கடற்படை தாக்குதல்; மீனவர்களின் ரூ.20 லட்சம் மதிப்பிலான சாதனங்கள் சேதம்: மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் காயமடைந்ததுடன் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மீன்பிடிச் சாதனங்களும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளதாவது:

“ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் நடைபெற்ற மோதல் குறித்து தங்களது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்தக் கடிதத்தை எழுதி உள்ளேன். 15 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட துயர நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த எதிர்பாராத தாக்குதலால் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடிச் சாதனங்களை இழந்துள்ள தமிழக மீனவர்கள் துன்பத்தில் நிலைகுலைந்துள்ளனர் என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்திய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக தமிழக கடலோரப் பகுதி மீனவச் சமுதாயப் பெருமக்கள் கடல்சார் மீன்வளத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அவர்களது வாழ்வாதாரம் ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி நிகழ்த்தப்படும் அத்துமீறிய தாக்குதல், கைது போன்ற கொடுமைகள் காரணமாக தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது.

மீனவ அமைப்புகளின் தலைவர்கள் பலமுறை இதுகுறித்து வேண்டுகோள் விடுத்திருப்பினும், அவர்கள் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சினை கச்சத்தீவு பகுதியில் மீண்டும், மீண்டும் நிகழ்ந்து கொண்டு இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு நமது மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவது மிகவும் அவசியமாகும்.

கோவிட் கொள்ளை நோய் உலக சமுதாயத்திற்கே பெரிய சவாலாக உள்ள நிலையில் இலங்கை கடற்படை கச்சத்தீவு பகுதியில் நமது மீனவர்கள் நிகழ்த்தும் தாக்குதல்கள் வேதனைக்குரியதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண்பதுடன் தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட உதவுமாறு திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x