

இந்திய விமான நிலைய ஆணையத்திலேயே முழுமையாக சோலாரில் (சூரிய மின்சக்தி) இயங்கும் பெருமையைப் புதுச்சேரி விமான நிலையம் பெற்றுள்ளது. இதனால் மாதந்தோறும் ரூ.10 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகும்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்குச் சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்துக்குத் தேவையான மின்சாரத்தைச் சோலார் மூலம் தயாரிக்கும் உற்பத்தி நிலையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ.2.8 கோடியில் விமான நிலைய ஓடுபாதை அருகே 500 கிலோவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. சோலார் மின் உற்பத்தி நிலையம் மிக உயர்ந்த பாலி கிரிஸ்டலின் சோலார் பி.வி பேனல்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 7.2 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது முற்றிலும் சூரிய சக்தியால் இயங்குவதால் புதுச்சேரி விமான நிலையத்துக்கு மாதம் ரூ.10 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகிறது. இந்தியாவிலேயே முழுமையாக சோலாரில் இயங்கும் விமான நிலையம் இதுதான்" என்று குறிப்பிட்டனர்.