Published : 19 Oct 2020 05:26 PM
Last Updated : 19 Oct 2020 05:26 PM

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி: தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரத்திலும், சில மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சொத்துகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, பல உயிர்களையும் பறித்துள்ளது.

இருப்பினும் தங்களின் திறன்வாய்ந்த துரித நடவடிக்கையாலும், சிறப்பான பேரிடர் மேலாண்மையாலும் மக்களின் துயர் வெகு விரைவாக துடைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் துயரமான வேளையில், மாநில அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தெலுங்கானா மக்களுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் வகையிலும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.10 கோடி கொடுக்க வலியுறுத்தியுள்ளேன்.

தெலங்கானா அரசின் தேவைக்கு ஏற்ப வேறு எவ்வித உதவியும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x