Published : 19 Oct 2020 03:57 PM
Last Updated : 19 Oct 2020 03:57 PM

செங்கல்பட்டில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 33 ஏக்கர் இடம்: பாரம்பரிய இயற்கைத் தோட்டம் அமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 33.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் பாரம்பரிய வகை மரக்கன்றுகளைக் கொண்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணியினை ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''கடந்த 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் சென்னையைச் சேர்ந்த ஆர்.எம்.அழகப்பா செட்டியார், செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான 33.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்குத் தானமாக வழங்கினார். இதில் 3.000 சதுர அடி பரப்பளவில் 2016-ம் ஆண்டு தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்பொழுது மீதமுள்ள இடத்தை ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்து பாதுகாப்புடன் பராமரிக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சியால் பாரம்பரிய மர வகைகளான மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, சீதா, நாவல், அத்தி, வில்வம், இலந்தை, கொடுக்காபுளி, பப்பாளி, முருங்கை, தென்னை, பனை மரங்கள், அழகு தாவரங்கள் என சுமார் 10,000 மரங்கள் கொண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20,724 சதுர அடியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வளசரவாக்கம் மண்டலம், பகுதி - 34 கோட்டம்-155ல் ராயலா நகர் 2-வது பிரதான சாலையில் 10,000 சதுர அடி கொண்ட இந்நிலத்தில் 6,000 சதுர அடியில் ரூ.8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் 1 மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற காடுகளினால் நகர்ப்புற மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மையை மேம்படுத்தும் சூழ்நிலையும், நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்கள் மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடையக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் ஆணையர் பிரகாஷ், முதற்கட்டமாக 500 பாரம்பரிய மரவகைகளை இன்று (19.10.2020) நட்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x