7.5% உள் ஒதுக்கீட்டில் ஆளுநரை வலியுறுத்தாமல் இருப்பது முதல்வர் செய்யும் துரோகம்: ஸ்டாலின் விமர்சனம்

7.5% உள் ஒதுக்கீட்டில் ஆளுநரை வலியுறுத்தாமல் இருப்பது முதல்வர் செய்யும் துரோகம்: ஸ்டாலின் விமர்சனம்
Updated on
1 min read

தமிழகத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதும், அதை முதல்வர் வலியுறுத்தாமல் இருப்பதும் மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:

“மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அளித்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், "தமிழக ஆளுநர் - முதல்வர்- மத்திய பாஜக அரசு" ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்ததுபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் - நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in