Published : 19 Oct 2020 11:03 AM
Last Updated : 19 Oct 2020 11:03 AM

தேனியில் விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுக்க காவல்துறை முயற்சி: கே.எஸ்.அழகிரி கண்டனம்

தேனி - போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலையில் தேனி - போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய ஜனநாயக சட்டவிரோதச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன்.

எனவே, மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அமைதியான முறையில் சட்டம்- ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நடத்துகிற விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தும்படி தமிழக தலைமை காவல்துறை அதிகாரி ஜே.கே.திரிபாதியையும் , தமிழக உள்துறை செயலாளரையும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x