Published : 19 Oct 2020 07:05 AM
Last Updated : 19 Oct 2020 07:05 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் இதுவரை 97 பேர் கைது: மேலும் 40 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக, 51 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். குரூப்-4 தேர்வில் இடைத்தரகராக செயல்பட்டதாக ஜெயக்குமார், மோசடிக்கு உதவி செய்ததாக டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் அனைவரும் அரசுப் பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதானவர்கள் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில், கரோனாபொது முடக்கம் வந்ததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும், 46 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், கரோனா காலம் என்பதால் அவர்களை கைது செய்யாமல் இருந்தனர்.

தற்போது வழக்கமான பணிகளுக்கு அனைவரும் திரும்பிய நிலையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 46 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். “டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை மொத்தம் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அதிலும் பலர் கைது செய்யப்படுவார்கள்” என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x