கிராமசபை கூட்டங்களை நடத்தக் கோரி கொள்ளிடம் அருகே போராட்டம்

கிராமசபை நடத்தக் கோரி போராட்டம்
கிராமசபை நடத்தக் கோரி போராட்டம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை ஊராட்சியில் இன்று போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மே 1 தொழிலாளர் தினம் ஆகிய நாட்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்க வேண்டிய கிராமசபை கூட்டங்களை திடீரென்று முதல் நாள் இரவு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனால் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில் கிராமசபை கூட்டங்களை கரோனா பரவல் தடுப்பு காரணமாக ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனால் ஊராட்சியில் நடைபெற வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயனாளிகளை தேர்வு செய்ய முடியவில்லை, ஊராட்சி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க முடியவில்லை என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், உடனடியாக கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று (அக். 18) கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துரை ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். கையில் பதாதைகளை ஏந்தியபடி தனிமனித இடைவெளி விட்டு கலந்து கொண்ட இளைஞர்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜியும் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in