Published : 18 Oct 2020 05:51 PM
Last Updated : 18 Oct 2020 05:51 PM

நீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது: அன்புமணி வேண்டுகோள்

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மாணவி ஒருவர், நிகழாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், அந்த மாணவி குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி நேற்று (அக். 17) தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (அக். 18) தன் ட்விட்டர் பக்கத்தில், "நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் செஞ்சி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி பெறுவதே தீர்வு. தற்கொலை தீர்வு அல்ல!

நீட் தேர்வால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் எத்தனை பேரின் உயிரை நீட் காவு வாங்கப் போகிறதோ? நீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x