Published : 18 Oct 2020 07:41 AM
Last Updated : 18 Oct 2020 07:41 AM

கொலை, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இலங்கையின் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல்: ‘இன்டர்போல்’ போலீஸார் எச்சரிக்கை

சென்னை

போதைப் பொருள் கடத்தல், கொலை உட்பட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய இலங்கை நிழல் உலக தாதாக்கள் சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக இன்டர்போல் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர் அங்கொட லொக்கா. தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா, தமிழகத்தில் கோவை நகரில் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். அவர் எப்படி உயிரிழந்தார், தமிழகத்துக்கு எப்படி தப்பி வந்தார் என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் சிவகாமி சுந்தரி, அம்மானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, இலங்கையை சேர்ந்தவர் அலகாபெருமகா சுனில் காமினி என்கிற பொன்சேகா(52). இலங்கையில் இவர் மீது கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து, தலைமறைவாக இருந்தவரை, கடந்த 13-ம் தேதி தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். பொன்சேகா குறித்து கியூ பிரிவு போலீஸார் கூறும்போது, “போலி பாஸ்போர்ட் மூலம் அவர் இந்தியா தப்பி வந்தது 2013-ம் ஆண்டு தெரியவந்தது. தமிழக போலீஸிடம் சிக்காமல் இருக்க அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஓசூர்மற்றும் பெங்களூரு என பல இடங்களில் அவர் வசித்து இருக்கிறார். பொன்சேகாவிடம் இருந்துசெங்கல்பட்டு மற்றும் பெங்களூருவில் வசிப்பதற்கான வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

இலங்கையைச் சேர்ந்த பிரபலதாதாக்கள் தமிழகத்தில் பதுங்கிஇருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் அறிவிப்பாக இன்டர்போல் இதை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தலைமறைவாக இருப்பவர்கள் சர்வதேச அளவில் தேடப்படும் நபர்கள் என்றும் இன்டர்போல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x