

பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள அர்க்கீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற முறைகேடு காரணமாக, கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக்கொண்டது. அறக்கட்டளையிடம் இருந்தகோயில் பொறுப்புகள் அரசால் நியமிக்கப்பட்ட தக்காரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பம்மல் அண்ணா நகரில் புகழ்பெற்ற அர்க்கீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இக்கோயிலில் இறந்தவர்கள் பெயரில் போலியாக கையெழுத்துப் போட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது, வாடகை வருவாயை கணக்கில் காட்டாமல் மோசடிசெய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள்தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு வந்தன. அப்புகாரின்பேரில்கோயிலில் நடைபெற்ற விசாரணையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இக்கோயிலை இந்துசமய அறநிலையத் துறை கையகப்படுத்துவதாக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உதவி ஆணையர் கவெனிதா கோயிலுக்கு வந்து,கோயில் பொறுப்புகளை அறக்கட்டளையிடம் இருந்து பெற்று, அரசால் நியமிக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, ஆதிபுரீஸ்வரர் கோயிலின் செயல் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தார்.
கோயிலை இந்து சமய அறநிலையத் துறை எடுத்துக்கொண்ட அறிவிப்பு நோட்டீஸ் கோயிலைச் சுற்றி ஒட்டப்பட்டு, கோயிலில் உண்டியலும் வைக்கப்பட்டது. அர்க்கீஸ்வரர் கோயிலை அரசு ஏற்றுக்கொண்டதற்கு பம்மல் பொதுமக்களும், இக்கோயிலின் பக்தர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.