Published : 18 Oct 2020 07:15 AM
Last Updated : 18 Oct 2020 07:15 AM
கரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றுசுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுநடைபெற்றது. சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மருத்துவமனை டீன் பாலாஜி, ஆர்எம்ஓ ரமேஷ், காவல் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிவில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பண்டிகை நாட்களில்...
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தினமும் குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. பல்வேறு மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பின்னரே பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது கவனமுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து வணிகர்களிடம், குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பேசும்போது, “சென்னையில் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 50 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. மேலும் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தடுக்கும்வகையில் முதல்கட்டமாக சென்னையில் 65 சாலைகள் கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்புகளைஅகற்றி, ரோட் மார்க் மற்றும் பார்க்கிங் உள்ளிட்டவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மக்களுக்கு சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் ரேஸ் செல்பவர்கள் மீதும்கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாஸ்க், ஹெல்மெட் இரண்டுமே அவசியம். முதல்கட்டமாக காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட எல்இடி. சிக்னல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பல்வேறு மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பின்னரே பாதிப்புஎண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT