Published : 25 Sep 2015 08:40 AM
Last Updated : 25 Sep 2015 08:40 AM

ரயில் கொள்ளைகளை தடுக்க ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் நியமனம்

சென்னை சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை இடையே ரயில் கொள்ளைகளைத் தடுக்கவும், பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் 21 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய ரயில்வே பாதுகாப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பேசின்பிரிட்ஜ் அருகே சிக்கனலுக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலான விரைவு ரயில்கள் அதிகாலையில் சென்னை சென்ட்ரலை வந்தடைகின்றன. இந்த நேரத்தில் ரயில் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் ரயில்களில் ஏறி அடிக்கடி கொள்ளையடிக்கின்றனர். இது ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கொருக்குப்பேட்டை பேசின்பிரிட்ஜ் இடையே நடக்கும் கொள்ளைகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் வரும் கொள்ளையர்கள் கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். எனவே, அப்பகுதியில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினரை நியமித்துள்ளோம். ஒவ்வொரு ஷிப்டிலும் தலா 7 பேர் பணியாற்றுவார்கள். இதுதவிர, ரயில்வே பாதுகாப்பு படையினர் 10 பேர் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x