Published : 17 Oct 2020 10:53 PM
Last Updated : 17 Oct 2020 10:53 PM

மனைவி, மகள், மகனுக்கு விஷம் கொடுத்து கணவர் தற்கொலை முயற்சி; வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்த சோகம்

சென்னையில் குடும்பப் பிரச்சினை காரணமாக குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதில் மனைவி, மகள், மகனுக்கும், வளர்ப்புப் பிராணிக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்றதில் கணவர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

திருவிக நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெற்றி நகர், ராமசாமி தெருவில் வசிப்பவர் பழனி (47). இவருக்கு பவானி (40) என்ற மனைவியும் தேவதர்ஷினி (17) என்ற மகளும் பிரகதீஸ் (11) என்ற மகனும் இருந்தனர்.

இன்று மதியம் அவர்கள் வசிக்கும் வீட்டில் ஆளரவமற்று இருந்ததால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்களது படுக்கை அறையில் இறந்த நிலையில் தாய், மகள், மகன் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வாசலில் அவர்கள் வளர்த்து வந்த சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த 2 வயது நாயும் இறந்து கிடந்தது. இதையடுத்து கணவர் பழனி என்ன ஆனார் எனத் தேடியபோது இரண்டாவது மாடியில் பூட்டப்பட்ட அறையில் இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் உடைத்து திறந்ததில் பழனி (47) கையில் அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அளவான அருமையான குடும்பம், அனைவரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியவில்லை.

கரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு கடன் பிரச்சினை போன்ற காரணங்களுக்காகத் தற்கொலை செய்திருக்கலாமோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி சுயநினைவுக்கு வந்தால் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x