மா.சுப்பிரமணியம் மகன் உயிரிழப்பு; என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது: ஸ்டாலின் இரங்கல்

தன் மகன் அன்பழகனுடன் மா.சுப்பிரமணியம் | கோப்புப் படம்.
தன் மகன் அன்பழகனுடன் மா.சுப்பிரமணியம் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம், கடந்த செப்.28 ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது. ஆனால், லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், அவரது இரண்டாவது மகன் அன்பழகன் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தனியறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று 'நெகட்டிவ்' என வந்தது.

இந்நிலையில், தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் இன்று (அக். 17) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

" மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

ஏற்கெனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.

மா.சு. இணையருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா?

அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in