Last Updated : 17 Oct, 2020 01:17 PM

 

Published : 17 Oct 2020 01:17 PM
Last Updated : 17 Oct 2020 01:17 PM

மயிலாடுதுறையில் ஆதரவற்ற முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த முன்னாள் எம்எல்ஏ

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் யாருமில்லாமல் இறந்த முதியவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து மனிதநேயம் காட்டியிருக்கிறார் மயிலாடுதுறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அக்.5-ம் தேதியன்று மாலை முகத்திலும் காலிலும் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார் 80 வயது முதியவர் ஒருவர். ஈக்கள் மொய்த்த நிலையில் கிடந்தவர் குறித்துத் தகவல் கிடைத்ததும் சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரம், கிங்பைசல், ஜோதிராஜன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். திமுகவைச் சேர்ந்த மயிலாடுதுறை முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் ஆலோசனையின்படி அவரை மீட்டு 108 வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த முதியவருக்கு இயன்ற மருத்துவ உதவிகளையும், ஏனைய உணவு, உடை போன்றவற்றையும் கொடுத்து நேரில் கண்காணித்து வந்தார்கள். அத்துடன் அவரது உறவினர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். அதற்குப் பலனும் கிடைத்தது. அந்த முதியவரின் பெயர் சங்கர் ராவ் என்பதும், மேட்டூர் கெமிக்கல் காலனியில் வசிப்பவர் என்றும் தகவல்கள் கிடைத்தன.

அதன் அடிப்படையில், மயிலாடுதுறை வழக்கறிஞர் முத்துக்குமாரின் முயற்சியால் மேட்டூர் முகவரியில் முதியவரின் உறவினர்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடல் தொடங்கியது. அங்கு யாரும் இல்லை என்றாலும் முதியவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அந்தச் சகோதரி புனேவில் இருப்பதும் தெரியவந்தது.

அவரின் தொடர்பு எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டார்கள். முதியவருக்கும் தங்களுக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை, முற்றிலும் அவரைக் கைவிட்டுவிட்டதாக சகோதரி தரப்பில் பதில் சொல்லப்பட்டது. அதனால் சமூக ஆர்வலர்களே முதியவரின் அனைத்துத் தேவைகளையும் கவனித்து வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனையடுத்து அவரை முறைப்படி அடக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. உறவினர்கள் இருந்தும் அநாதரவாக இறந்த முதியவர் உடலை அடக்கம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்களுடன் மயிலாடுதுறை காவல்துறையும், ஜெகவீரபாண்டியனும் இணைந்தனர்.

அரசு மருத்துவமனையில் இருந்து முதியவரின் உடலைப் பெற்றுக் கொண்டவர்கள் அங்கேயே உடலுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து, தீப்பாஞ்சி அம்மன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை ஜெகவீரபாண்டியன் முன்னின்று செய்தார். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர், உறவினர்கள் செய்ய வேண்டிய மற்ற இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்து முதியவரை அடக்கம் செய்தனர்.

இப்பணியில் சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரம், கிங்பைசல் ஜோதிராஜன், காவல்துறையைச் சேர்ந்த சிவா, மங்கை சீனிவாசன், திருக்கடையூர் சரவணன், வினோத், அசோக்குமார், மயிலாடுதுறை காவல்துறையைச் சேர்ந்த ராஜராஜ வர்மன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

"வயதான காலத்தில் முதியவர்களை இவ்வாறாக தவிக்க விடுவது, வீட்டை விட்டு வெளியேற்றுவது, கண்டும் காணாமல் இருப்பது, உணவில்லாமல் தவிக்க விடுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். பராமரிக்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள முதியோர் இல்லங்களிலாவது பெரியவர்களை ஒப்படைக்க வேண்டும்" என்று ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x