Published : 17 Oct 2020 12:28 PM
Last Updated : 17 Oct 2020 12:28 PM

கரோனா தொற்றால் பாதிப்பு: திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் மகன்  உயிரிழப்பு

மகன் அன்பழகனுடன் மா.சுப்பிரமணியம் | கோப்புப் படம்.

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகன் இன்று திடீர் மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையிலும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மக்கள் பணி ஆற்றினர். இதில் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம் கடந்த செப்.28 ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது. ஆனால் லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகன் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தனியறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது.

இந்நிலையில் தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் இன்று திடீர் மரணம் அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x