Published : 17 Oct 2020 11:42 AM
Last Updated : 17 Oct 2020 11:42 AM

‘நீங்களும் ஒரு நாள் ஒரு நபருக்கு உணவு அளிக்கலாம்’ - கடலூரில் புதிய திட்டம் தொடக்கம்

‘உலகில் யாரும் பசியால் வாடக்கூடாது’ என்பதற்காக பலரும் அன்னதானம் வழங்கிவருகின்றனர். இதை அறிவுறுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம்தேதி உலக உணவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி ‘நீங்களும் ஒரு நாள் ஒரு நபருக்கு உணவுஅளிக்கலாம்’ என்ற ஒரு புதியமுயற்சியை தாங்கள் வீடுகளிலிருந்து உணவுகளை சமைத்து பார்சலாக பிறருக்கு கொடுத்து உதவும் புதிய முயற்சி கடலூரில் தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டுள்ளது.

உணவு வழங்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து உணவைப் பெற்று, பசியால் வாடுபவர்களை கண்டறிந்து உணவு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றவர்களிடையே உணவுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை கடலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி, முடிந்த அளவுக்கு பசியால் வாடுபவர்களை கண்டறிந்து உணவுகளை வழங்கி பாதுகாக்க வேண்டும் என்று திட்டத்தை செயல்படுத்தும் தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கடலூர் வட்டாட்சியர் பலராமன் ரூபவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘நீங்களும் ஒரு நாள் ஒரு நபருக்கு உணவு அளிக்கலாம்’ என்ற இத்திட்டத்தின் மூலம் எளியவர்களுக்கு உணவு அளிக்க விரும்புவோர் கடலூரில் உள்ள தன்னார்வலர்களை 96883 25355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x