Published : 17 Oct 2020 11:14 AM
Last Updated : 17 Oct 2020 11:14 AM

குறுங்காடுகளை உருவாக்க களத்தில் சுழலும் இளைஞர்கள்: ஆரணியில் புதிய பாதையில் இயற்கையை மீட்டெடுக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஆரணி இளைஞர்கள் களத்தில் பம்பரமாக சுழல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் “வானம் பார்த்த பூமி”யாக உள்ளது. நாளுக்கு நாள் காடுகளின் பரப்பளவு சுருங்கியதால், மழை பொழிவும் குறைந்து போனது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் குடிநீரின் தேவை கேள்விக்குறியானது. இதனால், தமிழகத்தின் நெற்களஞ்சி யத்துக்கு இணையாக, தி.மலை மாவட்டத் தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் சாகு படியும் குறைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் புகழ்பெற்ற ஆரணி மற்றும் களம்பூர் அரிசியின் உற்பத்தியும் பாதிக்கும் சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஆரணி இளைஞர்கள் களம் இறங்கி உள்ளனர். 15 இளைஞர்கள் ஒன்றிணைந்து, “ஆரணி பசுமை இயக்கம்” என்ற அமைப்பை தொடங்கி, இயற்கை வளத்தை மீட்டெடுக்கும் முனைப்புடன் செயல்படுகின் றனர். மரக்கன்றுகள் நடுதல், குறுங்காடுகளை உருவாக்குதல், நீர் நிலைகளை சீரமைத்தல் போன்ற பணியை கடந்த 2 ஆண்டுகளாக ‘ஓசையின்றி’ செய்து வருகின்றனர்.

தங்களின் பணிகள் குறித்து ஆரணி பசுமை இயக்கத் தலைவர் மகேந்திரன் கூறும்போது, “மழை பொழிவை அதிகரிக்கவும், நீர் வளத்தை மேம்படுத்தவும் மற்றும் காற்று மாசை தடுக்கும் முயற்சியாக ஆரணி பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பு குறித்து மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரணி அருகே ஆதனூர், மெய்யூர்,எஸ்.சி. நகரம், முள்ளிப்பட்டு, நெசல், தச்சூர் உட்பட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். களம்பூர், அய்யம்பேட்டை, மேல் சீசமங்கலத்தில் 4 குளங்களை சீரமைத்து, குளக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறோம்.

10,000 பனை விதைகள்

எங்களது முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் மாநில மரமான பனை மரங் களை வளர்க்க முக்கியத்துவம் கொடுத்துள் ளோம். இதற்காக, ஏரிக்கரைகளை தேர்வு செய்து பனை விதைகளை நட்டு வருகிறோம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்துள்ளோம். நாங்கள் விதைத்த விதைகளில் பெரும்பாலனவை வளரத் தொடங்கி உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

வளரும் 5 ஆயிரம் மரங்கள்

எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கமான, ‘குறுங்காடு வளர்ப்பு’ திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்துள்ளது. ஆரணி நகரில் உள்ள அனந்தபுரம் ஏரியில், 30 அடி அகலம், 700 அடி பரப்பளவில் கடந்த 28-09-2019-ல் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரசமரம், ஆலமரம், பூவரசன், புங்கன், வேம்பு, மலைவேம்பு, நாவல், இலுப்பை, நீர் மருது, மகாகனி, மகிழம், சந்தனம், வேங்கை, வாகை, செம்மரம், கல்யாண முருங்கை, வில்வம், விலாம்பழம், மா, பலா, கொய்யா, அத்தி, பாதாம், காட்டு நெல்லி, பாரிஜாதம், ஆடாதோடை, ஆவாரம் பூ, பனை உட்பட 35 வகையான 3 ஆயிரம் மரங்களை நட்டு வளர்க்கிறோம். ஒவ்வொரு மரமும் 10 அடி உயரத்தை கடந்து வளர்ந்துள்ளன. எங்களது முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். இதன் தொடர்ச்சியாக, அதே ஏரியில், 2-வது பாகமாக 20 அடி அகலம் 700 அடி நீள பரப்பளவில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை சமீபத்தில் நட்டு வளர்த்து வருகிறோம்.

2 குழுக்களாக பிரிந்து பராமரிப்பு

மரக்கன்றுகளை நட்டுவிட்டு செல்வது என இல்லாமல், எங்கள் அமைப்பினர் இரு குழுக்களாக பிரிந்து காலை 6 மணி முதல் 9 மணி வரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ரசாயனம் கலப்பின்றி காய்கறி கழிவுகள் உட்பட இயற்கை சார்ந்த உரங்களை தயாரித்து பயன்படுத்துகிறோம். மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கான நிதியை, அமைப்பில் உள்ளவர்கள் மூலமாக திரட்டிக் கொள்கிறோம். ஒருவர் மூவாயிரம் ரூபாய் என ரூ.45 ஆயிரம் சேகரித்து குறுங்காடு அமைத்தல் உள்ளிட்ட பணியை செய்கிறோம்.

மாவட்டம் முழுவதும் இலக்கு

மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அவர்களாகவே, முன் வந்து உதவிகளை செய்கின்றனர். இது எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஆரணி நகரில் மரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், ஆரணி நகரம் முழுவதும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், ஆரணி சுற்றுப்புறபகுதி கிராமங்களில் முழுமையாக குறுங்காடு களை அமைத்து, மரங்களை வளர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறோம். இந்த பணி முழுமை பெற்றதும், மாவட்டம் முழுவதும், எங்களது பணியை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

குறுங்காடு அமைக்கும் பணியில் பெரிய அமைப்புகள் ஈடுபட்டு வரும் நிலையில், ஆரணியில் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து களம் இறங்கி சுழல்வது அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x