Published : 17 Oct 2020 07:05 AM
Last Updated : 17 Oct 2020 07:05 AM

சிறப்பு அந்தஸ்து அவசியம்: அரசு மறுபரிசீலனை செய்ய பாலகுருசாமி கோரிக்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு நிகழ்ச்சிசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடந்தது. அப்போதுசெய்தியாளர்களிடம் பாலகுருசாமி கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசுஏற்க மறுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் பல்கலை.க்கு அதிக நிதி கிடைக்கும். அதைக் கொண்டு கல்வியின் தரத்தை உயர்த்த முடியும். ஏழை மாணவர்களுக்காக கல்வித் தரத்தை குறைக்க கூடாது. ஏழை மாணவர்கள் படிப்பதற்காக தனியாக கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, அண்ணா பல்கலைக்கு கிடைக்கவுள்ள சிறப்பு அந்தஸ்தை நிராகரிக்கக் கூடாது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு துணைவேந்தர் கே.சுரப்பா கடிதம் எழுதியதில் எந்தத் தவறும்இல்லை. தமிழகத்துக்கு சிறப்புஅந்தஸ்து உள்ள பல்கலைக்கழகம் வேண்டும் என்று அவர் விரும்பியதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் அனைத்து மாணவர்கள் படிக்கின்றனரா? ஐஐடியில் அனைத்து மாணவர்களும் படிப்பதில்லை.

பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனத்துக்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதேபோன்று பிற கல்லூரிகளை உருவாக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் பல்கலை. நிர்வாக குழுவில் தமிழக அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் உயர்கல்வித் துறைச் செயலாளரை விட உயர்ந்தவர். ஆனால் தமிழகத்தில் உயர்கல்வித் துறைச் செயலாளர்கள் துணைவேந்தரை வரவழைத்து பேசும் வழக்கம்தான் உள்ளது. எனவே, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x